0

அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை எடுக்கலாம் என்று மத்திய நிதித்துறை செயலாளர் அசோக் லாவசா தெரிவித்தார்.

மத்திய நிதித்துறை செயலாளர் அசோக் லாவசா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ''ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் மக்கள் சில சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களது சிரமங்களைப் போக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுப்பதற்கும் மற்றும் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்ததன் நோக்கத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். எனவே தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், இடையூறுகளை சமாளிப்பதில் மத்திய அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம்.

மக்களின் பண பரிவர்த்தனை தேவைக்காக மாற்று ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய ரூபாய் நோட்டுகள் வினியோகத்தை ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணிக்கும். பணப் பரிமாற்றம் என்பது பல்வேறு வழிகளில் நடக்கலாம். என்றபோதிலும், இதில் ரொக்கம் அல்லாத பரிவர்த்தனையை நோக்கிச் செல்லவே மத்திய அரசு விரும்புகிறது.

தற்போது ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதில் உள்ள சிக்கல்கள் புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளின் வினியோகம் சீரடைந்தவுடன் எளிதாகிவிடும்.

அனைத்து ஏ.டி.எம். மையங்களும் வெள்ளிக்கிழமை(நாளை) திறக்கப்பட்டுவிடும். பல ஏ.டி.எம். மையங்கள் வியாழக்கிழமை(இன்று) திறக்கப்படும். இவற்றில் இருந்து புதிய ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

Post a Comment

 
Top